Tuesday, January 8, 2013

திருப்பாவை 22ஆம் பாசுரம் - அங்கண் மா ஞாலத்தரசர்


இப்பவும் "சங்க தமிழ் மாலை முப்பது" என்ற திருப்பாவை வியாக்யான புத்தகத்தில் நான் படிக்கிற ஒவ்வொரு பாவை பாசுர விளக்கங்கள் மிகவும் அருமை.  அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.

இனி அங்கண் மா ஞாலத்தரசர் என்று துவங்கும் பாசுர விளக்கம் :

அங்கண் மா ஞாலத்தரசர்
அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிகட்டின் கீழே
சங்கமிருப்பார் போலே வந்து தலைபெய்தோம்
கிண்கிணி வாய் செய்த தாமரை பூப்போலே
செங்கண் சிறிசிறிதே எம்மேல் விழியாவோ 
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கனிரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். 

என்ற இருபத்திரண்டாம் பாசுர விளக்கம் பிரதிவாதி பயங்கர அண்ணன்கரசார்யர் எழுதியது:

அங்கண் மா ஞால பாசுரத்தில் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்  எங்கள் மேல் சாபம் இழிந்து என்று இருப்பதை நோக்கி இம்மாலை குறிப்பு.

சாபத்தை ஒருவர் போக்குவதாக பாசுரத்தில் சொல்லப்படவில்லை. சாபம் தன்னடையே தொலையுமேன்றே சொல்லபடுகிறது. "விழுந்தான்" என்பதற்கும் "தள்ளுண்டான்" என்பதற்கும் எவ்வளவு  வித்யாசம் உண்டோ அது போல வாசி உண்டு  நிவ்ருதிக்கும் நிவாரணத்திற்கும். 

எம்பெருமானுடைய கடாக்ஷம் சாப நிவாரணம் செய்வதாகக்கொண்டால் என்ன குறை என்று மன்றாட வேண்டாம், தப்பென்று நாம் சொல்லி விட்டால் தப்புதான் அது. த்ராதும் ந சக்தா யுதி ராம வத்யம் - (இராமாயணம்) என்பதை நினைப்பது, ஆய்ச்சிகள் தங்கள் மேல் ஏதோ சாபம் இருப்பதாக இப்பாட்டில் சொல்லுகிறார்களே, இவர்களுக்கு எவ்விதமான சாபம்?, யார் கொடுத்த சாபம்?, எப்போது கிடைத்த சாபம்? என்று கேட்க  வேண்டா ; அவசியம் அனுபவித்தே தீர  வேண்டியதான பாபமே சாபம் என்பது . எம்பெருமானை விட்டு பிரிந்திருப்பது பிரபல பாபத்தின் பலன் ஆதலால் இதுவே சாபம் எனப்படுகிறது. இது அவன் தந்திருக்கண்  பட்டவாறே தொலையும்.  இங்கு "ச்ரமணி(சபரி ) விதுர, ரிஷிபத்னிகளை  (அஹல்யா ) பூதராக்கின புண்டரிகாஷன் நெடுநோக்கு சாபம் இழிந்தென்ன பண்ணுமிரே "
என்கிற ஆசார்ய ஹ்ருதய  சூரணை  வ்யாக்யானத்துடன்  அனுசந்திக்கத்தக்கது. 

எம்பெருமானுடைய ஒவ்வோர் அவயவமும் ஒவ்வொருத்தருடைய சாபம் தீர்த்தது. 

திருவடி தூள் அஹல்யாவின் சாபம் தீர்த்தது. திருமுழந்தாள்  குபேர  புத்ரர்களான நள குபர மனிக்ரீவர்களின் சாபம் தீர்த்தது. (யமளார்ஜுன  பங்க  கதையை  நினைப்பது ). 

திருத்துடைகள் மது கைடபர்களின் சாபம் தீர்த்தன. (பிஷ்ட துஷ்ட மது கைடப  கீடௌ ) இத்யாதி சுந்தர பாஹுத்வ சூக்தியை நினைப்பது ) 

ருத்ர  சாபம் மார்பில்  ச்வேதத்தாலே  தீர்ந்தது, 

துர்வாச சாபம் மார்பில் இருப்பாளாலே  தீர்ந்தது.  

இப்போது திருக்கண்களால்  ஒரு சாபம்  தீர்கிறது. நித்ய சம்ச்லேஷம் கிடைப்பதே  இவர்களுக்கு சாபம் தீர்வதாம்.

எம்பெருமானுடைய  திருமேனியில் மூன்று திவ்ய அவயவங்கள் பக்தர்களுக்கு முக்கியமானவை . அவற்றுள் முதலிலே திருக்கண்." ஜாயமானம் ஹி  புருஷம் யம்  பச்யேத் மதுசூதனஹ , சாத்விக  ஸ  து விக்நேய  ஸ வை  மோக்ஷார்த்த  சிந்தக " என்ற படியே  ஜாயமான காலத்திலேயே கடாக்ஷித்து  சாத்விகத்தை உண்டாக்க வல்லதன்றோ இது. அப்படி கடாக்ஷிக்க பெற்றவர்களுக்கு  திருவடியே தஞ்சம் ஆகிற படியால் அது  இரண்டாவதான அவயவம். அப்படி திருவடிகளிலே விழுந்தவர்கள்
 "அஞ்சேல் என்று கை கவியாய் "என்று  அபய  பிரதானத்தையே  விரும்பி கொண்டிருபவர்கள் ஆதலால் அபயமுத்ராஞ்சிதமான  ஹஸ்தம் மூன்றாவதான அவயவம். இவை எல்லாவற்றிலும் முக்கியமான அவயவம் திருக்கண்களே  ஆகும். அவற்றால் கடாக்ஷிக்க பெற்றால் சாபம் என்று பேர் பெற்ற எல்லாம் தொலைந்து போம். உள்ளுறை பொருள் ஆக ஆச்சார்ய கடாக்ஷ பிரதானம் விளக்கப் படுகிறது.

சௌ.வை.ராமன்
ஜனவரி 5, 2013

No comments:

Post a Comment