Sunday, January 13, 2013

திருப்பாவை 28ஆம் பாசுரம் - கறவைகள் பின் சென்று

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் 
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னை 
பிறவி பெரும் தன்னை புண்ணியம் யாம் உடையோம் 
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா - உந்தன்னோடு 
உறவேல் நமக்கிங்கு  ஒழிக்க ஒழியாது 
அறியாத பிள்ளைகளோம் அன்பினால்  உந்தன்னை 
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய் பறை ஏலோரெம்பாவாய்


கறவைகள் பின் சென்று என்று இருபத்தெட்டாம் பாட்டில் "உந்தன்னை சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே" என்பது உயிரான வார்த்தை ஆகும். 

விஸ்வ ரூபம் கண்ட அர்ஜூனன்  ' சகேதி மத்வா பிரசபம் யதுக்தம் ஹே! கிருஷ்ண ஹே! யாதவ ஹே! சகேதி, அஜானதா மஹிமானம்  தவ......தத் க்ஷாமயே தவம் அஹம் அப்ரமேயம்' என்று மிகப்பெரிய  நாமங்களான  நாரயணாதி  நாமங்களை  இட்டு அழையாமல்  யாதவ! கோபால! என்று சிறிய நாமங்களை இட்டு அழைத்துவிட்டேனே; இது உன் பெருமை தெரியாமையினால் செய்த குற்றம்; இதை பொறுத்தருள வேணும்- என்று க்ஷாமணம் கொண்டான். 

கோபிகள் கண்ணனுடைய சௌலப்ய சௌசீல்ய பெருமைகளிலே மிக மிக ஈடு பட்டு விட்டதினால் இவர்களுடைய கொள்கைப்படி அவனுடைய பரத்வம் பயனற்றதாயிற்று.  ஆகவே பரத்வத்துக்கு 
ஏகாந்தமான நாராயண நாமத்தை சொன்னது அபசாரமாக தோற்றித்து இவர்களுக்கு. கோபாலன் கோவிந்தன் தாமோதரன் நவநீத சோரன் என்பன போன்ற திருநாமங்களே பெரிய பெயர்களாகவும், நாராயண நாமம் சிறு பேராகவும் தோன்றிற்று. ஐயோ! என் செய்தோம் என்  செய்தோம்!! "நாராயணனே நமக்கே பறை தருவான் " என்றும் "நாற்றத்துழாய் முடி நாராயணன்" என்றும் சிறு பேர்களை இட்டு வ்யவஹரித்தோமே ! இவ்வபசாரத்திற்கு சீற்றம் கொள்ளாமல் பொருத்தருள வேணும்-- என்று வேண்டிக்கொண்டபடி. 

நாராயண நாமத்தை சிறு பேர் என்றால் இது மஹா அபசாரம் அன்றோ! என்று நினைப்பார்கள் அரசிகர்கள். பகவானை பராத்பரன் என்று துதிப்பது அவனுக்கு உகப்பா? சுலபன், சுசீலன் என்று துதிப்பது உகப்பா ? என்று கேள்வி பிறந்தால், பராத்பரனாக இருந்த இருப்பிலே மிக வெறுப்பு உண்டாகித் தாழவிழிந்தவிடத்திலும், பரத்வத்தையே பேசினால் உகப்பு எங்கனே உண்டாகும்? சீற்றம்தான் பிறக்கும். சீற வேண்டாமென்று பிரார்த்திக்க வேண்டியது கடமையாயிற்று.   

இப்பாட்டில் "உன்றன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது" என்ற வாக்கியம் உயிராகக்கொள்ளத்தக்கது. எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள ஸம்பந்தத்தை  தெரிந்து கொள்வதற்கு மேற்பட்ட கர்த்தவ்யம் நமக்கு எதுவும் இல்லை என்பது நூற் கொள்கை.

மூல சுக்ருதமான ஈஸ்வரனுடைய குண பூர்த்தியை அனுஸந்திக்கையும் , ஸம்பந்தத்தை உணருகையும், பூர்வ அபராதங்களுக்கு க்ஷாமணம் பண்ணுகையும், உபாயபூதனான ஈஸ்வரன் பக்கலிலே உபேயத்தை அபேக்ஷிக்கையும்  ஆகிற இவை ஆறும் அதிகார அங்கங்கள் ஆதலால் இப்பாட்டில் இவ்வாறும்   வெளியிடப்படுகின்றன.

முரளி 
ஜனவரி 11, 2013

No comments:

Post a Comment